Tuesday, June 26, 2012

ஐயப்பனின் தரிசனம் கிடைக்க ...

ஐயப்பனின் தரிசனம் கிடைக்க ...

ஐயப்ப விரத முறை

கார்த்திகை முதல்நாள் நீராடி, பெற்றோரை வணங்க வேண்டும். குருசாமியின் கரத்தால் மாலை அணிய வேண்டும். குருசாமி மூலம் முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து சுவாமியே சரணம் ஐயப்பா! உன் தரிசனம் தடையின்றி கிடைக்க வேண்டும். இந்த விரதம் எவ்வித பிரச்னையுமின்றி முடிவதற்கு அருள்தருவாய், எனச் சொல்லி அணிந்து கொள்ள வேண்டும். அன்றுமுதல் தினமும் குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் நீராடி, 108 முறை ஐயப்ப சரணம் கூறி, ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும். இரவில் தூங்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகலில் தூங்கக் கூடாது. பிரம்மச் சரியம் மேற்கொள்ள வேண்டும்.

அசைவ உணவு, போதைப் பொருட்கள் பழக்கம் இருந்தாலும், இனி என் வாழ்க்கையில் இதை இனி தொடவே மாட்டேன், என சங்கல்பம் (சத்தியம்) செய்ய வேண்டும். இதைச் செய்யாத பட்சத்தில் மாலையணிந்து சபரிமலை சென்றாலும், ஐயப்பன் இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனையை ஏற்கவே மாட்டான். விரதகாலத்தில், பிறருடன் சண்டை சச்சரவு களிலும் ஈடுபடக்கூடாது. உரையாடும் போதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று கூற வேண்டும். இலையில் சாப்பிடுவதுடன், இயன்ற அளவு அன்னதானம் வழங்க வேண்டும். கன்னிசுவாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்தி, சக பக்தர்களையும், ஏழைகளையும் ஐயப்பனாகக் கருதி சித்ரான்னங்கள் (தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புளியோதரை போன்ற சிற்றுண்டிகள்) தானம் செய்ய வேண்டும். நெருங்கிய உறவினர் இறப்பு ஏற்பட்டால் மாலையைக் கழற்றிவிட வேண்டும். அதன்பின் விரதத்தை தொடரவோ, மலைக்குச் செல்லவோ கூடாது. பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும். மாலையணிந்தவர்கள் வீடு, திருமண வீடுகளில் மட்டும் உணவு அருந்தலாம். பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் நாட்கள் தவிர பிற நாட்களில் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெருக்களில் விற்கும் பலகாரங்களையும் சாப்பிடக்கூடாது. சபரிமலைக்கு சென்று திரும்பிவிட்டாலும், மகர பூஜை (தை1) முடியும் வரை முந்தைய நாட்களைப் போலவே விரதம் இருக்க வேண்டும்.

மாலை அணியும் மந்திரம்

ஞானணித்ராம் சாஸ்த்ரு ணித்ராம் குருணித்ராம் நமாம் யஹம்
வனணித்ராம் சுக்த ணித்ராம் ருத்ர ணித்ராம் நமாம் யஹம்
சாந்தணித்ராம் சத்தியணித்ராம் வ்ருதுணித்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன ணித்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே -
சரணாகத ணித்ராக்யம் த்வன் ணித்ராம் தாரயா

இருமுடியில் வைக்கும் பொருட்கள்

இருமுடியில் முன்முடி, பின்முடி என இரு பிரிவு உண்டு. முன்முடியில் பூஜை பொருட்களையும், பின்முடியில் பக்தருக்குரிய சமையல் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட வேண்டும். பூஜைக்கு மஞ்சள்பொடி சிறிதளவு, மஞ்சள், பன்னீர் (சிறிய பாட்டில்), தேன் (சிறிய பாட்டில்), சந்தன வில்லைகள் பத்து, குங்குமம் சிறிய பாக்கெட், விபூதி பாக்கெட், பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சை, உலர்ந்த திராட்சை (50 கிராம்), முந்திரி, (50 கிராம்), கல்கண்டு, அச்சுவெல்லம் (இரண்டு), அவல், அவல்பொரி, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு, சுக்கு, ஏலக்காய், காணிப்பொன் (குறைந்த விலையில் கிடைக்கும் தங்கத்தகடு), கருப்பு வளையல், திரிநூல், பெரிய தேங்காய் ஒன்று, சிறிய தேங்காய் மூன்று, பச்சரிசி அரை கிலோ, பசுநெய் -300 கிராம். இருமுடிகட்டும் போது, சுவாமியே சரணம் ஐயப்பா, பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, யாருடைய கட்டு, சாமியுடைய கட்டு, எப்போ பயணம், இப்போ பயணம், பகவானே- பகவதியே, பகவதியே- பகவானே, ஈஸ்வரனே- ஈஸ்வரியே, ஈஸ்வரியே-ஈஸ்வரனே, சுவாமியே.. ஐயப்பா என்ற சரண கோஷங்களை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சொல்ல வேண்டும். அனைவரும் கூற வேண்டும்.

ஐயப்பன் - பெயர்க்காரணம்?

ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும் என்றார். அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன் என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார். ராஜாவும் சபரிமலைக்கு அடிக்கடி செல்வார். பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். ஐயோ! அப்பா! என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆகிவிட்டதாக கர்ணபரம்பரைக் கதையுண்டு. நிஜத்தில் ஐயன் என்ற சொல்லே இப்படி மாறியிருக்கிறது. ஐயன் என்றால் தலைவன். அதனால் தான் பெரியவர்களை ஐயா என மரியாதையுடன் அழைக்கிறோம். ஐயனுடன் அப்பனையும் சேர்க்கும் போது, அந்த ஐயனே நமது தந்தை என்றாகிறது. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது, நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக ஒரு கருடன் வருவது விசேஷ அம்சமாகும்.

420 பவுன் தங்க அங்கி ஐயப்பனுக்கு மன்னர் சித்திரைத் திருநாள் மகாராஜாவால், ஒரு தங்க அங்கி காணிக்கையாக வழங்கப்பட்டது. இது 420 பவுன் (3.36 கிலோ) எடை கொண்டது. மண்டல பூஜையன்று இது சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த அங்கி கேரளாவிலுள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க மண்டலபூஜைக்கு சிலநாட்கள் முன்னதாக சபரிமலைக்குச் புறப்படுகிறது. கோழஞ்சேரி, பத்தனம்திட்டா வந்து மலையோலப்பட்டி தேவி கோயிலில் இரவு தங்குகிறது. மறுநாள் ரானி, வடசேரிக்கரை, நிலக்கல் வழியாகப் பம்பை வருகிறது. இங்கிருந்து பெட்டியில் வைக்கப்பட்ட அந்த அங்கி தலைச்சுமடாக சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது.

வெள்ளம்குடி பூஜை

கேரள மாநிலத்தில் சபரிமலை செல்லும் கன்னி சுவாமிகளுக்கான பூஜையை வெள்ளம் குடி, அல்லது படுக்கை என்பர். வீட்டின் கிழக்குப் பாகத்தில், வெள்ளைத்துணியால் பந்தல் அமைத்து அலங்கரிப்பர். பந்தலின் கீழே மேஜையிட்டு, கணபதி, மாளிகைப்புறத்தம்மன், மலை நடைபகவதி, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி, வாவர்சுவாமி ஆகியோரை சந்தனம் அல்லது மஞ்சள் உருண்டை பிடித்து வைத்து, அவற்றில் அந்தந்த தெய்வங்களை ஆவாஹனம் (எழுந்தருளச்செய்தல்) செய்வர். ஐயப்பன் படம் அல்லது சிறிய விக்ரகத்தை நடுவில் வைப்பர். அவர் முன்பு நெல் பரப்பி, அதன் மேல் ஒரு வாளை வைப்பர். மேடை முன்பு ஆழி (அக்னிகுண்டம்) ஏற்றுவர். மேடை முன்பு குத்துவிளக்கு ஏற்றி, அவல், பொரி, பழம் படைப்பர். தீபாராதனை நடந்த பின் ஐயப்பன்மார்கள், அக்னிகுண்டத்தை வலம் வந்து சுவாமியே சரணம் ஐயப்பா! என்று சரண கோஷம் எழுப்புவார்கள். சில பக்தர்கள் அருள் மிகுதியால் ஆழியிலுள்ள நெருப்பைக் கையால் வாரி எறிவார்கள். நாதஸ்வரம், செண்டை வாத்தியங்களோடு பக்திப் பரவசத்தில் திளைப்பார்கள்.

அவன் பார்த்துக் கொள்வாள்!

* கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான். செல்வத்தையும், செல்வாக்கையும் தேடுபவன். அவற்றை அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.
* ஒருவனது அகங்காரம் அவனது உடல் இருக்கும் வரை அவனை விட்டு முற்றிலும் நீங்குவதில்லை. அதன் அடையாளம் சிறிதளவேனும் எப்போழுதும் தங்கியிருக்கும்.
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் தெரியும். குணத்தைப் பற்றி அறிந்தவன் குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
* நம்பிக்கை கொள். கடவுளை நம்பி இரு. பின்னர் நீயாக எதையுமே செய்ய வேண்டியிருக்காது. அன்னை காளி உன் பொருட்டுத் தானே அனைத்தையும் செய்வாள்.
* இறைவனை வெளியே தேடுதல் அறியாமை. தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு.
* கடவுள் கற்பக மரத்தைப் போன்றவர். நீ அவரிடம் வேண்டுவது உனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வரும்தான் வேண்டுவதைப் பெறலாம்.
* பாம்பின் பற்களில் விஷமிருந்தாலும் பாம்புக்கு அதனால் சிறிதும் தீங்கில்லை. அது இறப்பதுமில்லை. ஆனால், பாம்பு எதையாவது தீண்டினால் தீண்டப்பட்டதற்கு அந்த விஷம் தீங்கு செய்கிறது. எனவே, கெட்டவர்களுடன் சேராதே.
* அனைத்து உயிர்களிடமும் சமமாய்க் காட்டப்படும் அன்பு, தயை எனப்படும். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்ற ஞானத்திலிருந்தே இந்தத் தயை உண்டாகிறது.
* மனிதன் ஒரு தலையணை உறைக்கு ஒப்பிடலாம். கருப்பு, சிவப்பு, பச்சை முதலிய பல நிறம் கொண்டவைகளாக இருக்கலாம். அவை எல்லாவற்றுக்குள்ளும் இருப்பதும் ஒரே பஞ்சு தான். அதுபோல், மனிதருள் சிலர் அழகாகவும், நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்குள்ளும் இறைவன் மட்டுமே உறைகிறான்.
* ஒருவன் சாப்பிட்ட உணவை அவன் விடும் ஏப்பத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், ஒரு ஞானியை நீ அணுகினால் அவர் உடனே கடவுளைப் பற்றிய விஷயங்களைப் பேச ஆரம்பித்து விடுவார். ஆனால், உலகப்பற்றுள்ளவனோ, உலக விவகாரங்களைப் பற்றியே பேசுவான்.
* செம்பொன்னிற்கும், பித்தளைக்குமுள்ள வேறுபாடு உரைகல்லில் உரைப்பதால் தெரியவரும். அதுபோல நல்லவரையும், அல்லாதவரையும் அவரவர்களுடைய பக்தியினால் அறிய முடியும்.
* ஒருவனுக்கு உண்மைப் பக்தி தோன்றி, அவன் சாதனைகள் செய்யவிரும்பினால் பகவான் நிச்சயமாக அவனுக்குத் தகுந்த குரு ஒருவனை ஏற்படுத்துவார். அதைப்பற்றிய கவலையே வேண்டியதில்லை.
*விவேகமும் வைராக்கியமும் இல்லாமல், வேதநூல்களைக் கற்பதால் எந்தப்பயனுமில்லை.
* உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே சாதனைகள் செய்து மனத்தை அடக்கி ஆள்பவனே உண்மை வீரன்.
* மனிதனுடைய மனம் தராசுக்கோல் போன்றது. இந்த மனத்தராசின் இருதட்டுகளில் இரண்டு வித எடைகள் உள்ளன. உலகத்தின் மீதும், பட்டம், பெருமை இவற்றின் மீதும் உள்ள பற்று ஒன்று. மற்றொன்று அறிவு, பற்றின்மை, கடவுளிடம் அன்பு முதலியவை.
* வெட்கம், வெறுப்பு, அச்சம் இவை மூன்றும் நம்மிடம் உள்ள வரையில் நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்காது.
* கடவுளை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மார்க்கமே ஆகும்.


ஜோதி வடிவில் ஐயப்பன்


இறைவனுக்கென்று உருவவழிபாடு வந்தது பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில், மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது.எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வமாக வழிபட்டுள்ளான். சூரிய வழிபாடு முதலில் தோன்றியது. நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால் தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார். இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதேபோல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதிவடிவாக, காந்தமலையிலுள்ள பொன்னம்பலமேட்டில் மகரசங்கராந்தியன்று ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்


ஐயப்ப சுவாமி மெனு

சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு அதிகாலை பூஜையில் அஷ்டாபிஷேகம் நடத்தப்படும். அதாவது, விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தூயநீர் போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். திருமதுரம் (பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்யம் செய்யப்படும். பின்னர் நெய்யபிஷேகம் நடக்கும். மதிய பூஜைக்கு இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவை சேர்த்து, ஐயப்பனுக்கு பாயாசம் தயாரிக்கப்படுகிறது. இதை மகா நைவேத்யம் என்பர். நண்பகலுக்கு முன் 15 தீபாராதனைகள் நடக்கும். தீபாராதனையின் போது பச்சரிசி சாதம், இரவு பூஜைக்கு அப்பம், பானகம், பச்சரிசி சாதம் ஆகியவை நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

இறை வணக்கம்

கற்பூர ஜோதி பிரியனே சரணம் ஐயப்பா!
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!
தேவர்கள் பூஜிதனே சரணம் ஐயப்பா!
சர்வரோக நிவாரணனே
சரணம் ஐயப்பா!

பொருள்: கற்பூர ஆழி தீபத்தை விரும்பி ஏற்கும் ஐயப்ப சுவாமியை சரணடைகிறேன். காந்தமலையில் ஜோதியாகக் காட்சி தரும் மணிகண்டனின் பாதங்களைப் பணிகிறேன். தேவர்கள் பூஜித்த கண்கண்ட தெய்வத்தை சரணாகதி அடைகிறேன். அனைத்து நோய்களையும் தீர்த்து நல்வாழ்வு தரும் ஐயப்ப சுவாமியின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன்.

காலை நேர ஸ்லோகம்

இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

பொருள்: ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும்
சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும்
ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து,
பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.

மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

No comments:

Post a Comment